Monday, January 12, 2015

நெகிழ வைத்த திரைப்படங்கள் -6 The Stoning of Soraya M

ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் ஆண்களின் சமூகத்தாலும், ஆண்களின் பொய்களாலும், அவர்களின் கடவுள்களாலும், மதத்தின் பெயராலும், கற்பு என்ற பெயராலும் அடக்குதலுக்கும் அச்சுறுத்தல்களும் உள்ளாக்கப் பட்டுக்கொண்டிருக்கும்  கோடிக் கணக்கான பெண்களின் ஒற்றைக் குரலாக ஒலிக்கும் திரைப்படம்தான் இந்த . The Stoning of Soraya M 1986ல் ஈரானில் நடந்த உண்மைச் சம்பவம் புத்தகமாக வெளிவந்து பின்னர் திரைப்படமாக்கப் பட்டது.

The Stoning of Soraya M.


தனது கார் ஈரானின் உள்ளடங்கிய கிராமமான குபையாஹ் வில் நின்று போய்விட அதை சரிசெய்யப் போகும் ஈரானிய-ப்ரெஞ்ச்சு பத்திரிகையாளரான ஃப்ரொடொன் ஸ்பாஜெமை சந்திக்கும் சாரா என்னும் பெண் தன் உறவுக்கார பெண்ணுக்கு நடந்த சம்பவம் குறித்து உண்மைகளை சொல்வதுதான் படத்தின் மொத்தக் கதையும்.

ஸொரயாவுக்கு இளம் வயதிலேயே அலி என்பவனோடு திருமணம ஆகி இரண்டு ஆண் இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றன, அலி ஈரானின் சிறையில் கண்காணிப்பளாராக ஒரு உயர்ந்த பதவி , வகிக்கும் கிராமத்தில் கொஞ்சம் செல்வாக்குள்ள ஆள், சிறையில் மரண தண்டனை பெற்ற ஒரு டாக்டரின் விடுதலைக்காக லஞ்சமாக மெஹ்ரா என்ற டாக்டரின் 14 வயது மகள்  அலிக்கு பேரம் பேசப்படுகிறாள். ஸொராயாவை மிரட்டியும் அடித்தும் தன் இரண்டு மகன்களை தாய்க்கு எதிராகவே திருப்பி விட்டும் விவாகரத்து கேட்கிறான் அலி. ஆனால் தன் மகள்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து ஸொராயா மறுத்து விடுகிறாள்.

இந்த விவாகரத்து விஷயத்தில் கிராமத்தின் முல்லாவும் அலிக்கு எப்படியாவது உதவி செய்தே ஆகவேண்டும் என்று முயற்சிக்கிறார். காரணம் முல்லா முல்லா ஆவதற்கு முன்பு ஈராணிய ஷா ஆட்சிகாலத்தில் மனித உரிமை மீறல்களை செய்த ஒரு ஆள் அதற்கான ஆதாரம் தன்னிடம் இருப்பதாக அலி முல்லாவை மிரட்டுகிறான். வேறு வழியில்லாத முல்லா ஸொராயாவிடம் சென்று எல்லா பஞ்சாயத்துப் பண்ணும் மத குருமார்களைப் போலவே அவனை விட்டுவிடு எனக்கு ஆசை நாயகியாக இரு என்று சொல்லி பேசிக் கொண்டு இருக்கும் போது அங்கே வரும் சாராவுக்கும் முல்லாவுக்கும் பிரச்சினை ஆகி விடுகிறது.

இதற்கிடையே ஸொரயா கோபித்துக்கொண்டு சாராவின் வீட்டில் இருக்கும்போது அதே ஊரில் கார் மெக்கானிக்காக இருக்கும் ஹஷீமின் மனைவி இறந்து போக ஹஷீமுக்கு வீட்டு வேலைக்காரியாக ஸொரயாவை ஊர் வழக்கப் படி மேயரும், முல்லாவுமே பணிக்கு அமர்த்துகிறார்கள். ஏற்கனவே ஸொராயாவை விவாகரத்து செய்ய முடியாத கோபத்தில் இருக்கும் அலி தன் மனைவிக்கும் ஹஷீமுக்கும் இடையே தகாத உறவு இருப்பதாக குற்றம் சாட்டி அதற்கு சாட்சியாக ஹஷீமையே மகனை அனாதை ஆக்கிவிடுவேன் என்று மிரட்டி  திருப்புகிறான்.  கிராமத்தின் மேயரான இப்ராகிமும் இதற்கு துணை போகிறார்.

இந்த திட்டங்கள் எல்லாம் தெரிந்த சாரா ஸொராயாவுக்கு ஆதரவாக எவ்வளவோ போராடிப் பார்த்தும் அந்த ஊரின் தீர்ப்பின் படி குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப் படும் ஸொராயா கல்லால் அடித்துக் கொலைசெய்யப் படுகிறாள். அலிக்கும் மெஹ்ராவுக்கும் திருமணம் நடக்கவில்லை, காரணம் சிறையில் இருக்கும் டாக்டர் கொலை செய்யப் படுகிறார். 

படம் முழுக்கவே ஆண்களின் உலகம் எத்தனை கொடூரமானதாகவும், சுயநலத்தோடும், பெண்களை எப்படியெல்லாம் வஞ்சித்துக் கொண்டும் இருக்கிறது என்பதற்கு  ஒட்டு மொத்த வெளிப்பாடாக இருக்கிறது. தன் தாய்க்கு எதிராகவே கையை ஓங்கிக் கொண்டு வரும் மகனை ஆதரவோடு பார்க்கும் தந்தையும், மகன் அடிக்க வருவதை பார்த்து கலங்கிப் போய் இருக்கும் ஸொராயாவுமே காலம் காலமாய் பெண் என்பதால் மட்டுமே ஒடுக்கப் பட்டும் அடக்கப் பட்டும் கிடக்கும் கோடிக் கணக்கான பெண்களின் கதையைச் சொல்லிவிடுகிறது.

ஒட்டுமொத்த ஆண்களின் ஒற்றை சாட்சியாக அலியும், பெண்களின் ஒடுக்கப் பட்ட குரலாக ஸொராயாவும் படம் முடியும் வரை பயணிக்கிறார்கள். மதத்தின் பெயரால் மட்டும் அல்ல ஒட்டு மொத்த  ஆண் குலத்தாலும் அடங்கிக் கொண்டும் கொலையாகிக் கொண்டும், தற்கொலை செய்து கொண்டும் பாலியல் வன் கொடுமைமைக்கு ஆளாகிக் கொண்டும் இருக்கும் எல்லா பெண்களுமே ஸொராயாக்கள்தான். தங்கள் சுயநலத்துக்காகவும் மதத்துக்காகவும் பெண்களை வஞ்சித்துக் கொண்டே இருக்கும் ஆண்கள் எல்லாமே அலிகள் தான்.

படத்தின் உயிர் நாடியாக கதையைச் சொல்லும் சாரா ஆங்காங்கே அடக்குதல்களுக்கும் அச்சுறுத்தல்களுக்கும் அஞ்சாமல் பெண்களின் வலிகளை உலகமெங்கும் உரக்கச் சொல்லும் குரலாக படம் முழுக்கவே ஒலித்துக் கொண்டிருக்கிறார்.  கொஞ்சமே கொஞ்சம் மனசாட்சி இருக்கும் ஆண்கள் என்று படத்தில் யாருமே இல்லை, அது உண்மையும் கூட. பெண்களுக்காக குரல் கொடுக்கும் எல்லா ஆண்களுக்கும் பின்னால் ஏதாவது ஒரு சுயநலம் கொஞ்சமாவது ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது என்பதற்கு படத்தில் வரும் மேயர் இப்ராகிமும், ஹஷீமுமே சாட்சி. 

ஸொராயாவாக நடித்திருக்கும்  Mozhan Marno  வின் கண்களே படத்தில் பாதி பாரத்தை சுமக்கின்றன, அந்த பேரழகான கண்களுக்குப் பின்னால் ஒளிந்திருக்கும் சோகமும் வலியும் உலகப் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் அநீதியின் குரலாக காலமெங்கும் ஒலிக்கும்.

படத்தின் கொலைக் காட்சியீன் போது ஒலிக்கும் அல்லாஹ்ஹூ அக்பர் என்ற ஒலியைத் தவிற்த்துவிட்டுப் பார்த்தால் இது மத்திய கிழக்குகளில் மதத்தின் பெயரால் நடக்கும் அநீதி என்பதை தாண்டியும் படத்தை இன்னொரு பரிமாணத்துக்கு கொண்டு செல்கிறது.

எல்லா முயற்சிகளுக்கும் பின்னால் தண்டனை அளிக்கப் படுவதற்கு முன்னால் ஸொராயா கூடியிருக்கும் ஆட்களை பார்த்து 

" எனக்கு ஏன் இப்படிச் செய்கிறீர்கள்? உங்களால் எப்படி முடிகிறது, நான் உங்களில் ஒருத்தி இல்லையா? உங்களுக்கு தாய் அல்லவா நான், நான் மகள் இல்லையா? நான் உங்கள் மனைவி இல்லையா, உங்கள் வீட்டில் சாப்பிட்டிருக்கிறேனே?, உங்கள் பக்கத்து வீட்டுக் காரிதானே நான்? "

என்று கேட்பது அந்த கூட்டத்திடம் மட்டும் அல்ல , படம் பார்க்கும் எல்லோரிடத்திலும்தான், கடைசியில் ஸொராயாமேல் எறியப்படும் கற்கள் எல்லாம் பார்வையாளர்களான நம் மேலேயே வந்து விழுகிறது. படம் முடிகையில் ஒட்டு மொத்த படுகொலையையும் வன் கொடுமைகளையிம் வேடிக்கை பார்க்கும் உலகச் சமுதாயம் போல வேடிக்கை காட்டவரும் கோமாளிகள் கூட்டம் ஒன்று வேடிக்கை பார்ப்பதோடு ஸொராயா கொல்லப் படுவதுதான் நிஜம்.  

இந்த உலகம், அலிகளுகாகவும், ஹஷீம்களுக்காகவும், முல்லாக்களுக்காகவும் படைக்கப் பட்டது, அங்கே ஸொராயாக்களுக்கும், சாராக்களுக்கும் இடமில்லை. என்னும் உண்மை உங்களை படம் முடிந்து பல நாட்களுக்கு துரத்திக் கொண்டே இருக்கும்.

தமிழ் சினிமாக்களில் எல்லாம் இதையெல்லாம் கணக்கில் கொள்ளாமல் அந்நிய நாட்டிடம் மண்ணு அடிமையாய்க் கிடக்கே என்ற ஒற்றை வரி வசனத்தால் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக அடிமையாகவே கிடக்கும் பெண்களின் வலியை கடந்து அதை நியாயமும் செய்யும்  ஜெயமோகன்கள்  ஆகச் சிறந்த ஆட்களாக இருப்பது நம் திரை மொழியின் சாபக் கேடு"




























No comments: