Monday, December 22, 2014

நீங்கள் இந்துவா இல்லை இந்தியனா?

இந்த காவிகளைப் பற்றி பக்கம் பக்கமாக எழுதித் தள்ளியாயிற்று, தமிழ் தேசியம் பேசுவோரின் இனத் தூய்மையை விட இந்து தேசியம் பேசும் தொகாடியாக்களின் பேச்சு ஆயிரம் மடங்கு அதிகம் வன்மம் கக்குவதாக மாறிக் கொண்டே போவது  மத்திய கிழக்கின் இசிஸ், இசில், தாலிபான், அல்கொய்தாக்களின் வளர்ச்சி போல ஒரு புற்று நோய் போல உலக சமூகத்தை அச்சத்துக்குள் தள்ள ஆரம்பித்திருக்கிறது.

இன்று கூட December 22, 2014 இந்தியாவில் இந்து மக்கள் தொகையை 100 சதவீதம் ஆக்குவோம் என்று வி.ஹெச்.பி. தலைவர் பிரவீன் தொகாடியா கொக்கரித்திருக்கிறார். இவர்கள் சொல்லும் இந்து நாடென்பது முதலில் யாரையெல்லாம் உள்ளடக்காது என்பதற்கு ஏகப்பட்ட ஆவணங்கள் உண்டு, சுருக்கமாகச் சொல்லப் போனால் ஒட்டு மொத்த சிறுபான்மையினர் அல்லாத இந்துக்களின் தேசமாக ஆக்கப் போகிறார்களாம்.

கூடவே கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் என்ற ஒன்றையும் கொண்டு வரப் போகிறார்களாம். நாசூக்காக "கட்டாய" என்றை சொல்லைச் சேர்த்துக் கொண்டுவிட்டார்கள். யார் வேண்டுமானாலும் எந்த சிறுபான்மை ஆட்கள் மேல் வேண்டுமானலும் என்னை இவர் "கட்டாயப்" படுத்தி மதம் மாற்ற முயல்கிறார் என்று குற்றம் சாட்ட ஏதுவாக. ஏற்கனவே தமிழ்நாட்டில் ஊழல் வழக்கில் தண்டனை பெற்று பதவியை இழந்த ஜெயலலிதா இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்து பின்வாங்கினார் என்பதெல்லாம் மோடி மஸ்தான்கள் அறிவார்களோ இல்லையோ?

இதைத்தானே மத்திய கிழக்கில் இஸ்லாமியத்தின் பெயரால் செய்கிறார்கள்? சிங்கள பவுத்தத்தின் பெயரால் இலங்கை இனவாத அரசாங்கம் செய்கிறது? பங்களாதேஷ், பர்மா, ஆப்பிரிக்க நாடுகள் சூடான் இஸ்ரேல் எல்லாம் இதைத்தானே செய்தன? ஜெர்மனி இதைத்தானே செய்தது? பிறகென்ன வேற்றுமையில் ஒற்றுமை இந்தியாவுக்கு?

அப்படி என்ன செய்துவிட்டார்கள் என்று வாதம் செய்ய வரவேண்டாம் இத்தனை ஆண்டுகள் சும்மா இருந்தவர்கள் ஆட்சியும் அதிகாரமும் மிருக பலத்தோடு கிடைத்தவுடன் பேசவும் ஆரம்பித்து விட்டார்கள். இனி மீதம் ஒன்றும் இல்லை 

செய்ய வேண்டியது மட்டுமே பாக்கி. 

இனத் தூய்மைவாதம், மதத் தூய்மைவாதம் எல்லாம் போய் வரலாற்றை திரித்தும் எழுத ஆரம்பித்திருக்கிறது காவிகளின் கூடாரம். காந்தியும் தேசபக்தர், காந்தியைக் கொன்ற கோட்சேவும் தேச பக்தர் என்று! இவர்களிடம் இருந்து வேறென்ன வார்த்தைகள் வரும்? கீதையை இந்தியாவின் தேசிய நூலாக்குவோம் என்று முழங்கியவர்கள் தானே?.

நமக்கு வாய்த்த பிரதமர் பற்றி சொல்லவே தேவையில்லை. எப்படியும் ஐந்தாண்டுகளுக்குள் தன் கால் படாத தேசமே உலகில் இருக்கக் கூடாதென்ற முன் முடிவோடு பறந்துகொண்டே இருக்கிறார். அவருக்கு அதானிகளும் அம்பானிகளும்தானே முக்கியம்?. அடுத்ததாக செவ்வாய் கிரகத்தில் நிலக்கரி கிடைக்கும் என்றால் அதானி குழுமத்தோடு அங்கும் போய் ஒரு ஒப்பந்தம் போடுவார் என்று நம்புவோம்.

அரசாங்கத்தை வழி நடத்தவும், மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் எந்த கொள்கையும் அற்ற கட்சிகள் வெறும் மதம், தன் கட்சி சார்ந்த கொள்கைகளை மட்டும் வைத்துக் கொண்டு ஆட்சிக்கு வந்தால் என்னவெல்லாம் நடக்கும் என்பதை இன்னும் சில ஆண்டுகளில் தெரிந்துகொள்ளலாம் என்றிருந்த இந்திய மக்கள் ஆறே மாதங்களுக்குள் கசப்பு மருந்தை சுவைக்க ஆரம்பித்துவிட்டார்கள். 

உண்மையில் காவி கட்சிகளின் கொள்கைதான் என்ன என்று கேட்டால் எல்லோரும் அது, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி,சிவசேனா, பாஜக, இந்து முன்னனி என்று எவனைக் கேட்டாலும்  . ராமர் கோவில், சேது சமுத்திரத்தை காப்பாற்றுவது, படேல்களுக்கும், சாவார்கர் களுக்கும் சிலை வைப்பது உலகின் ஒரே இந்து நாடு என்ற பெருமையை நேபாளிடம் இருந்து பிடுங்கிக் கொள்வது என்று பதில் இப்படித்தான் இருக்கிது. ஆட்சியாளர்கள் வெறும் போட்டோஷாப் உத்திகளைக் கொண்டே குஜராத்தை ஜப்பான் ஆக்கிக் காட்டி இந்தியாவை வென்றவர்கள் ஆயிற்றே இன்னும் சில நாட்களின் ராமர் கோவிலை அயோத்தியில் கட்டியேவிட்டதாகக் கூட காட்டுவார்கள் படம்.

பாஜகவும் அதன் கூட்டாளிக் கட்சிகளும் எப்படியெல்லாம் பிற்போக்குத் தனமாக சிந்திப்பவர்கள் என்பதற்கு இந்தியர்கள் எல்லாம் ராமனின் பிள்ளைகள் என்று உளரிக் கொட்டிய சாத்வி நிரஞ்சன் ஜோதி ஒருவரே போதும் இப்பேர்பட்ட ஆட்களை எல்லாம் மத்திய அமைச்சர் ஆக்கி அழகு பார்க்கும் பெருமை பாஜகவுக்கு மட்டுமே சேரும், சொல்லி வைத்தார் போல சட்ட சபைகளில் ஆபாசப் படங்கள் பார்ப்பது என்பதும் இவர்களின் பொழுதுபோக்கு , பெண்களை தெய்வமாகக் கொண்டாடுவோம் என்பதும் இவர்களின் பொழுதுபோக்கு.

குஜராத்தில் திட்டம் போட்டு கலவரங்கள் நடத்திவிட்டு அதை ஒரு விபத்து என்றும் ஒரு நாய் தான் செல்லும் வண்டியில் அடிபட்டு இறந்துவிட்டால் வருந்துவேன் என்று சொன்ன ஒரு ஆளைத்தானே நாம் பிரதமராக்கி அழகு பார்த்துக் கொண்டிருக்கிறோம்?.

கோத்ரா முதல் உத்திரப் பிரதேச கலவரங்கள் வரை தன் ரத்தக் கறைகளை கழுவாமல் அதையே ஆதாரங்களாக வைத்து ஒரு ஆளும் தேசிய கட்சியின் தலைவராக அமித் ஷா வரமுடியும் என்கிறபோது பாபா ராம்தேவ்களும் ஏதாவது ஒன்று கிடக்க ஒன்று செய்து தொலைக்கப் போகிறார்களோ என்று பயமாய் இருக்கிறது. 

அத்வானி போகும் இடமெல்லாம் குண்டு வெடித்துக் கொண்டிருந்தது, நல்லவேளையாக தேர்தலில் ஜெயித்துவிட்டு அத்வானியும் ஓரங்கட்டப் பட்டுவிட்டதால் இனி அப்படி நடக்காது என்று நம்புவோம். மோடியின் கூட்டங்களில் இனி குண்டுகள் வெடிக்குமோ என்னமோ எல்லாம் அந்த அமித் ஷாக்களுக்கே வெளிச்சம். 

காவி பயங்கரவாதம் என்பதென்னவோ வடநாட்டுக்கு மட்டும் என்று நினைத்துக் கொண்டு இங்கிருக்கும் திரவிடக் கட்சிகளும், மாநிலக் கட்சிகளும் வாக்கு கிடைத்தால் போதும் என்பதற்காகவும் ஆட்சியில் அதிகாரத்தில் இருந்து பதவியைச் சுவைத்தால் போதும் என்பதற்காகவும் ஒரு கூட்டணியை அமைக்குமேயானால் அந்த பிழையை வரலாறு ஒரு போதும் மன்னிக்காது. காரியம் ஆனபின்னால் காலை வாரி விடும் கயவர்கள் நிறைந்த இடம் என்பதை சு,சாமி தன் ஒவ்வொரு டிவீட்டிலும் சொல்லிக்கொண்டே இருக்கிறார், மான ரோஷம் இல்லாமல் இன்னும் பாஜகவில் ஒட்டிக்கொண்டிருக்கும், ராமதாஸ்களும், விஜயகாந்த் களும் விரைவில் அரசு உப்பை ஓருபிடி தனியே தின்றாவது உணர்ச்சி பெறட்டும்.

சமூகநீதி சமத்துவம் என்று வாய்கிழியப் பேசும் ராமதாஸ் பாஜகவின் கொள்கையை தன் கொள்கையாக மாற்றி நாட்கள் பல ஆயின என்றாலும் திராவிட மண்ணில் காவி பயங்கரவாதம் இடம் கொள்ள அனுமதிக்கக் கூடாது என்பதே எல்லாருடைய ஆவலும், அதற்குள் அன்புமணிக்கு ஏதும் மந்திரிப் பதவி கொடுத்து காரியத்தை பாஜக கெடுத்துவிடாது என்று நம்புவோம்.  

எங்கெல்லாம் மத பயங்கரவாதம் தலைதூக்குகிறதோ அந்த நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போவார்கள் என்பதற்கு உதாரணமாக ஏகப் பட்ட நாடுகளைச் சொல்லலாம்.நாமும் அப்படி நாசமாய்த்தான் போகவேண்டுமா என்பதை இந்தியர்கள் சிந்திக்கவேண்டும். 

திராவிடம் பேசும் ஆட்களுக்கு இந்தியர்கள் மேல் என்ன அக்கரை என்று கேட்கும் ஆட்களுக்கு நாங்கள் திராவிடர்கள் அதனால்தான் இந்துக்களின் முகமூடிகளை கழட்ட முயற்சி செய்கிறோம். 

நீங்கள் இந்துவாக இருக்கவேண்டுமா இல்லை இந்தியனாக இருக்க வேண்டுமா? 

1 comment:

ஆய்க்குடியான் said...

மிக நேர்த்தியான ஆழமான பதிவு