Friday, May 30, 2008

நாயகன் பெரியார் 12

ஒருவன் தான் விரும்பும் நலன்கள் அனைத்தையும், மற்றவர்களுக்கும் உண்டாகச்செய்வதுதான் நாகரிகம்!

-பெரியார்



1944 ஜூலை 29. அன்றைய தினம் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் தென் ஆற்காடு மாவட்ட திராவிட மாநாடு. விழா நடப்பதற்கு ஒரு நாள் முன்ன தாகவே கடலூர் களைகட்டத் துவங்கியிருந்தது. மாநாட்டைத் துவக்கிவைக்க வரும் பெரியாரை வரவேற்கும்விதமாக பந்தல் அமைப்பதிலும், கொடிகள் கட்டு வதிலும் எண்ணிலடங்கா தொண் டர்கள் பலர் சுறுசுறுப்பாக ஈடுபட் டுக்கொண்டு இருந்தனர். அவர்களினூடே 11 வயதே ஆன ஒரு சிறுவனும் அங்குமிங்குமாக ஓடி ஆடி வேலை செய்துகொண்டு இருந்தான். அங்கிருந்த எவரும் அந்தச் சிறுவனை ஒருபொருட்டாக மதிக்கவில்லை. மறுநாள், மாநாட்டில் மைக்கைப் பிடித்து அவன் பேசிய பேச்சைக் கண்டு பெரியார், அண்ணா உட்பட அனைவரும் வியந்தனர். ''இவன் கழுத்தில் மட்டும் ருத்திராட்சம் இருந்திருந்தால், ஒருவேளை இவனையும் ஞானசம்பந்தன் ஆக்கியிருப்பார்கள். ஆனால், இந்தச் சிறுவன் ஞானப்பால் உண்ணவில்லை. இவன் உண்டது பகுத்தறிவுப் பால். அதனை ஊட்டியவர் நம் பெரியார்'' என அந்தச் சிறுவனின் திறமையை வியந்து பேசினார் அண்ணா. அந்த நிமிடம் முதல் தன் வாழ்க்கையைப் பெரியாரின் கொள்கைகளுக்காகவே அர்ப்பணித்துக்கொண்ட அந்தச் சிறுவன் வேறு யாருமல்ல... பிற்பாடு கழகத்தின் முக்கியத் தொண்டராகவும் பேச்சாளராகவும் படிப்படியாக வளர்ச்சி அடைந்து ஒருகட்டத்தில் பெரியாரின் நம்பிக்கைக்குரிய நபர்களுள் ஒருவராக மாறி, அவரது மறைவுக்குப் பின்பு இன்றுவரை திராவிடர் கழகத்தின் தலைவராகப் பதவி வகித்து வரும் கி.வீரமணிதான்!





அக் காலகட்டங்களில் பெரியாரின் பகுத்தறிவுப் பாசறையில் எண்ணற்ற கலைஞர்கள் அணி வகுத்து நின்றனர். அக்காலத்திய சினிமாக்களில் புகழ்பெற்ற நட்சத் திரங்களான கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தியாகராஜ பாகவதர் போன்ற கலைஞர்கள் பெரியாரைத் தங்கள் இதயங்களில் ஏந்தினர். நடிகவேள் எம்.ஆர்.ராதா பெரியாரின் சீரிய தொண்டராக, அவரது கருத்துக்களுக்காக தனது கலைப்பயணத்தை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டதோடு மட்டுமல்லாமல், தொடர்ந்து பல நாடகங்களை மேடையேற்றி தனித்தன்மையுடன் வெற்றி வாகை சூடி வலம் வந்து கொண்டு இருந்தார். அப்போது அவரது குழுவில் இருந்த ஓர் இளைஞனுக்கு வசீகரமான முகத் தோற்றம். கூடவே, அபார நடிப்பாற்றல்! வசன உச்சரிப்பு களில் வாள் வீச்சு. ஈரோட்டுக்கு நாடக நிமித்தமாக எம்.ஆர்.ராதா தனது குழுவுடன் வந்தபோது, அங்கே பெரியாரின் வீட்டிலிருந்த அண்ணாவின் பார்வையை அந்த இளைஞனின் திறமைகள் சுண்டி இழுத்தன. பிற்பாடு 'சிவாஜி கண்ட இந்து ராஜ்யம்' எனும் தலைப்பில் அண்ணா ஒரு நாடகம் நடத்தத் திட்டமிட்ட போது, அதில் சிவாஜியாக நடிக்க அந்த இளைஞனுக்கு அழைப்பு விடுத்தார் அண்ணா. அதில் 'காகபட்டர்' எனும் வேடத்தை தான் ஏற்றார். கணேசன் எனும் அந்த இளைஞனின் நடிப்பு அனைவரையும் வியப்பில் ஆழ்த் தியது. சென்னையில் ஒருமுறை அந்த நாடகம் நடத்தப்பட்டபோது விழாவுக்குத் தலைமையேற்றிருந்த பெரியார், சிவாஜியாக நடித்த கணேசன் எனும் அந்த இளை ஞனின் அற்புதமான நடிப்பில் மயங்கி, 'சிவாஜி' எனும் பெய ரையே அவருக்கு நிரந்தரமாகச் சூட்டி, தமிழர்களின் அடுத்த தலை முறைக்கான மகத்தான கலைஞனையும் தேர்வு செய்தார்.

1945களில் தமிழகம் முழுவ துமே பெரியாரின் கட்டுப்பாட்டில் வந்துவிட்டது போல, எங்கு பார்த்தாலும் திராவிட எழுச்சி கொடிகட்டிப் பறந்தது. குறிப்பாக, சென்னை முதற்கொண்டு குமரி வரை ஓர் அலை போல இளைஞர் களிடமும் மாணவர்களிடமும் அது புத்துணர்ச்சியை உருவாக்கி யிருந்தது. ஏற்கெனவே பெரியாரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட தொண்டர்கள் போக, அண்ணா வின் வசீகரத் தமிழால் கழகத்தில் புதிய கூட்டம் களைகட்டத் துவங்கியது. இந்த இரண்டு தலை முறைகளுக்கு இடையிலான இடைவெளிகள் கழகத்தின் கட்டுக்கோப்புக்கு ஊறு விளை விப்பதை பெரியார் உணர்ந்தார்.உண்மையில், பெரியாரின் மேல் அண்ணா வைத்திருந்த பற்றுக்கு இணையாக எதையும் ஒப்பிட முடியாது. கூப்பிட்ட மறு நொடி யில் ஏன், எதற்கு என்ற கேள்விகள் ஏதுமில்லாமல், பெரியாரின் அழைப்பை ஏற்று, ஈரோட்டில் அவரது வீட்டின் பின்பகுதியில் ஒரு சிறு ஓட்டு வீட்டில் தன் மனைவியுடன் தங்கி, மாதா மாதம் பெரியார் தந்த 60 ரூபாய் சம்பளத்துக்காக அண்ணா தன் வாழ்க்கையையே அர்ப்பணித் திருந்தார். இத்தனைக்கும், ஒரு முறை ஈரோடு வந்த பெரும் செல் வந்தரான ஜி.டி.நாயுடு, அண்ணா வைத் தமது நிறுவனத்தில் உயர்ந்த சம்பளத்தில் பணிபுரிய வருமாறு அழைத்தபோது அதனை மறுத்ததோடு, 'பெரியார் எனும் மகத்தான தலைவருக்குப் பின்னால் நின்று அவரது தொண்டோடு இரண்டறக் கலப்பது என் வாழ்வில் கிடைத்தற்கரிய பேறு! அதனை ஒருக்காலும் இழக்க மாட்டேன்' என உறுதிபடக் கூறிவிட்டார். அந்த அளவுக்கு பெரியாரின் மேல் அன்பும் பிணைப்பும் கொண்டிருந்தார் அண்ணா. என்றாலும் சில விஷயங்களில் பெரியாருடன் கருத்து வேறுபாடுகளையும் கொண்டிருந்தார். குறிப்பாக, பெரியார் குடிஅரசு இதழில் கொண்டு வந்த எழுத்துச் சீர்திருத் தத்தை அண்ணா, தான் ஆசிரிய ராக பொறுப்பேற்றிருந்த திராவிட நாடு நாளேட்டில் கடைப்பிடிக்கவில்லை. ஆனாலும், பெரியார் பெருந்தன்மையுடன் அண்ணாவின் கொள்கைச் சுதந்திரத்தை அனுமதித்தார். இக்காலத்தில் நடந்த இன்னொரு சம்பவம், தொண்டர்கள் மத்தியில் சில சலசலப்புகளை உருவாக்கியது. அது ஒரு திருமண நிகழ்வு.

கழகத்தின் துடிப்புமிக்க இளைஞரும், பெரியாரின் சகோதரர் ஈ.வெ.கிருஷ்ணசாமியின் மகனுமான ஈ.வெ.கி.சம்பத் மற்றும் சுலோச்சனாவின் திருமணம் 1946 செப்டம்பர் 15ம் தேதி திருப்பத்தூர் மீனாட்சி தியேட்ட ரில், பெரியார் தலைமையில் நடந்தது. வாழ்த்துரையின்போது பெரியார் பெண்களின் நகைப்பித்து குறித்தும், அதனால் ஏற்படும் அடிமைத்தனம் குறித்தும் பேசி னார். இச்சம்பவம் குறித்து அண்ணா, திராவிட நாடு இதழில் நகைச்சுவையாக, 'பெரியார் நகைப்பித்து குறித்துப் பேசும் போது அவரது வலதுகை விரலில் இருந்த பச்சைக்கல் மோதிரத் தையே மணமகள் குறும்பாகப் பார்த்துக்கொண்டிருந்தார்' என எழுத, அது தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை உருவாக்கியது. வெளிப்படையாக இல்லா விட்டாலும் இச்சம்பவம் உள்ளூர கழகம் இரு அணிகளாகப் பிரிய வழிவகைகளை உருவாக்கியிருந் தது. தொடர்ந்து கறுப்புச் சட்டை அணிவதிலும் அண்ணாவுக்குச் சில மாறுபாடான அபிப்ராயங்கள் தோன்றவே, பெரியார் வெளிப் படையாக பத்திரிகைகளுக்குப் பேட்டி அளித்து தனது நிலையை தீர்மானமாக வெளிப்படுத்தினார். 'கொள்கைக்கு கட்டுப்பட்டவர்கள் மட்டும் கட்சியில் இருந்தால் போதும்; அல்லாமல், கட்சிக் குள்ளேயே இருந்துகொண்டே குதர்க்கம் செய்வது வீண்வேலை' என அவர் கூறியது அண்ணாவுக் காகத்தான் என்பது வெளிப்படை யாகத் தெரிந்தது. இதனிடையே 1947 ஆகஸ்ட் 15 வந்தது. ''நம் முதுகில் அமர்ந்து இன்னும் வட நாட்டான் சவாரி செய்துகொண்டிருப்பதால், சுதந்திரம் நமக்குச் சுமைதான். இதனை வெளிப்படுத் தும் வகையில் அனைவரும் கறுப்புச் சட்டை அணிய வேண் டும்'' என்று பெரியார் கூற, அதை அண்ணா மறுத்து, ''நமக்கு இப்போது பாதி சுதந்திரமாவது கிடைத்துள்ளது. அதனால் வெள் ளைச் சட்டை அணிவோம்'' எனக் கூறியது இருவருக்கும் இடையி லான பிரிவை உறுதிப்படுத்தியது.இருந்தபோதிலும், அண்ணாவின் மேல் தான் இன்னமும் கொண்டு இருக்கும் மதிப்பை வெளிப்படுத்தும்விதமாக, அடுத்து வந்த ஈரோட்டு மாநாட்டின் ஊர்வலத்தில் அண்ணாவை மட்டும் நடு நாயகமாக சாரட் வண்டியில் நிற்கவைத்து, தள்ளாத வயதிலும் தொண்டர்கள் புடை சூழ படை வீரனாக தரையில் நடந்து வந்து ஆச்சர்யப்படுத்தினார் பெரியார்.ஆனாலும், இருவருக்கும் இடை யிலான பிளவு நாளுக்கு நாள் அதிகரித்தது.



கழகத்தில் ஏற்பட்ட இந்த பிளவுகளுக்கெல்லாம் மிக முக்கியக் காரணம் தேர்தல் அரசியல் தான். 'நமக்கு முழு பலமும் இருக்கும்போது, ஏன் நாம் தேர்தலில் நின்று ஆட்சியைப் பிடிக்கக் கூடாது' என்ற எண்ணம் அண்ணாவை முழுவதுமாக ஆட்கொண்டு இருந்தது. பெரியாருடன் இருந்தால் இந்த எண்ணம் நிச்சயம் நிறைவேறாது. அவர் தேர்தல் அரசியலை வெறுப்பவர் என்ற காரணத்தால், அண்ணா தனக்கு இருக்கும் செல்வாக்கை வைத்துத் தனியாகப் பிரிந்து கட்சி துவக்கி, தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பை ஏற்பது என திட்டமிட்டிருந்தார். உண்மையில் அவரது இந்த எண்ணம்தான் பெரியாரோடு அவர் கொண்ட முரண்பாடுகள் அனைத்துக்கும் காரணம். அவரது இந்த எண்ணத்துக்குத் தோதாக ஓர் அதிர்ச்சி யூட்டும் சேதியும் வந்தது.

1949 ஜூன் 9ம் தேதி, சென்னை தியாகராயநகரில் செ.தெ.நாயகம் இல்லத்தில், பெரியார் தனது 72ம் வயதில் தன் உதவியாளராக இருந்த 32 வயது மணியம்மையைப் பதிவுத் திருமணம் செய்துகொண்ட சேதி அது. உண்மையில் பெரியாரின் இத் திருமணம், தன் இறப்புக்குப் பின்னால், கட்சியையும் அதன் சொத்துக்களையும் தன் கருத்துக் களோடு முழுமையாக உடன் பட்ட ஒருவரிடத்தில் கைமாற்றிக் கொடுப்பதற்கான ஒப்பந்தமின்றி வேறில்லை. அதுவும்கூட கட்சி யில் வெளிப்படையிலான பிளவு கள் ஏற்படக் காரணமாக அமைந் தது. இது நிமித்தமாகப் பெரியார் தன் அரசியல் வழிகாட்டியும், எதிரியும், ஆருயிர் நண்பருமான ராஜாஜியிடம் தனது இந்த முடிவு குறித்து ஆலோசனை கேட்ட போது, அவரும் இதனை ஏற்க மறுத்திருந்தார். ஆனால், மணியம் மையார் பெரியாரின் ஒரு மாற்று ஊன்றுகோலாக விளங்கி, அவரை முழுமையாகத் தாங்கிய காலம் அது. அதனால் தீர யோசித்த பின்பே பெரியார் அந்த முடிவுக்கு வந்தார். மக்களும் தொண்டர் களும் தன்னைப் புரிந்துகொள் ளாததால் தனக்குக் கிடைக்கப் போகும் அவப்பெயரைக் காட் டிலும், வருங்காலத்தில் தனது கொள்கைகளும் கருத்துக்களும் தழைத்து நிற்பதும், பாதுகாப்பு ஏற்படுத்துவதும்தான் அவசியம் எனக் கருதி, எதிர்ப்புகளை அலட் சியம் செய்து, மணியம்மையைத் திருமணம் செய்துகொண்டார்.

விளைவு... கழகம் இரண்டாக உடைந்தது. அறிஞர் அண்ணா, ஈ.வெ.கி.சம்பத். க.அன்பழகன், இரா.நெடுஞ்செழியன், மு.கருணா நிதி, கே.ஏ.மதியழகன், என்.வி.நட ராஜன் போன்ற கழகத்தின் முக்கிய பேச்சாளர்கள் தனியாக அணி திரண்டனர். 1949 செப் டம்பர் 17... தமிழ்நாட்டின் அரசியலில் மற்றுமொரு முக்கிய மான நாள்! கருத்து வேற்றுமையில் பிரிந்தாலும், கொள்கையில் என்றும் பெரியார் வழியைப் பின்பற்றுவோம் எனக் கூறி, அண்ணா தலைமையில் அன்று புதிய கட்சி உதயமானது. திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பெயரும் அதற்குச் சூட்டப்பட்டது. கழகம் பிளவுபட்டது குறித்துப் பெரியார் கவலை கொள்ளவில்லை. அவரோடு இன்னமும் பெரும் படையென பல தொண்டர்களும் தலைவர்களும் அவர் பக்கம் நெஞ்சுறுதியோடு நின்றனர். என்றாலும், தான் தூக்கி வளர்த்த தனது அண்ணன் மகனான சம்பத்தே மாற்று அணியில் சேர்ந்ததை அவரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. தன் வாழ்வில் எப்போதும் கண்டிராத வேதனையையும் நெருக்கடியையும் அந்த 72 வயதில் பெரியார் எதிர்கொண்டார்.



-சரித்திரம் தொடரும்

1 comment:

தமிழினியன் said...

தங்களின் இந்த முயற்சிக்கு எனது பாராட்டுக்கள் தோழர்.

இவை அஜயன் பாலா எழுதி ஆனந்த விகடனில் தொடராக வரும் கட்டுரைகள்.
இப்போது அடுத்த நாயகன் அம்பேத்கர்.
தங்களால் இயலுமானால் இந்த நாயகனோடு அந்த நாயகனையும் வலையேற்றலாமே.